Sheikhagar.org - Official site for sheikhagar
தனி மனிதனாக நின்று தஃவாப் பணியை மேற்கொள்கின்றபோது எதிர்பார்க்கின்ற விளைவுகளை அடைய முடியாது
Created On: Sunday, 13 April 2014 07:12

பயணம் சஞ்சிகையின், அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களுடனான நேர்காணல்.
கேள்வி: பயணம் வாசகர்களுக்கு உங்களைப் பற்றியும் நீங்கள் தற்போது வகிக்கும் பொறுப்புக்கள் பற்றியும் அறிமுகப்படுத்த முடியுமா?
பதில்: நான் 1960ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள தோரயாய என்ற கிராமத்தில் பிறந்தேன். என்னுடைய தாய்வழி மூதாதையர்களுள் ஒரு சாரார் ஹைதராபாத் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இன்னொரு சாரார் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால், தந்தையின் பூர்வீகம் இலங்கை. தாயின் மூதாதையர்கள் உருது மொழியின் மூல மொழியான தக்னி மொழி பேசுபவர்கள். என்னுடைய தாய்க் கும் அந்த மொழிப் பரிச்சயம் இருந்தது. ஆனால் கவலைக்குரிய விடயம் எனக்கு அந்த மொழி தெரியாது. உருது மொழியைக் கற்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.
தோரயாய அத்தாரிக் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து, பின் பக்மீகொல்ல அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலயம், தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தொடர்ந்து, 1976இல் ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்தேன். அங்கு 7 வருடங்கள் கற்று, ஷரீஆ கற்கை நெறியை 1ஆம் தர சித்தியுடன் பூர்த்தி செய்தேன். இதனை எனது வாழ்வில் மனநிறைவான விடயமாகக் கருதுகின்றேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தேன்.
1982ஆம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவில் பட்டம் பெற்று வெளியேறிய நாள் முதல் இன்று வரை ஜாமிஆ நளீமிய்யாவில் பணி புரிகிறேன். ஆரம்பத்தில் ஒரு விரிவுரையாளராகவும் பின்னர் கல்விப் பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றினேன். 2001ஆம் ஆண்டு முதல் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறேன். எனது வாழ்க்கையை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணித்திருக்கிறேன், அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறித்த பணிக்காகப் படைத்துள்ளான். என்னை இந்தப் பணிக்காகவே படைத்திருக்கின்றான் என்று இதுவரை காலமும் நம்பி வருகிறேன். அந்த வகையில் கடந்த 38 வருடங்களாக நளீமிய்யா வளாகத்தில் இருக்கின்றேன்.
இலங்கையில் பொதுவான நீரோட்டத்திலிருந்து தஃவாப் பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன். ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் மாத்திரம் என்னைத் தொடர்புபடுத்தி பலர் நோக்குகின்றபோதிலும் என்னைப் பொறுத்தவரை முடியுமானவரை பிரதான நீரோட்டத்தில் இருந்து சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். இஸ்லாமிய இயக்கத்துடனான மிக நெருக்கமான தொடர்பு எனக்கு எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால், ஏனைய தஃவா அமைப்புகளுடனும் செயற்பட்டு வருகின்றேன். அந்த வகையில் இலங்கையில் சன்மார்க்கத் தலைமைத்துவமாகக் கருதப்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. தற்போது ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவராக இருக்கின்றேன். ஜம்இய்யதுல் உலமாவின் மிக முக்கியமான பிரிவான ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான அமைப்பின் செயலாளராகவும் மற்றொரு மிக முக்கிய குழுவான பத்வாக் குழுவிலும் அங்கத்தவராக இருக்கின்றேன்.
அரபுக் கலாசாலைகள் ஒன்றியத்தை உருவாக்கி வழிநடத்துவதிலும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறேன். அதன் உயர்மட்ட ஆலோசனை குழுவிலுள்ள ஐவரில் ஒருவராக நானும் உள்ளேன். இலங்கையில் முஸ்லிம்களின் நலனுக்காக உழைக்கின்ற பல அமைப்புகளின் ஆலோசகராக இருக்கின்றேன். கல்வித் திணைக்களத்தின் இஸ்லாம் பாட ஆலோசனைக் குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றேன். இவற்றோடு கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் முடியுமான பங்களிப்பை செய்து வருகின்றேன். குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளின் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், அறபு ஆகிய பாடங்களின் கலைத்திட்டங்களை வகுப்பதிலும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நூல்களைத் தயாரிப்பதிலும், பாடநூல்களைத் தயாரிப்பதிலும் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பு கிடைத்து வந்திருக்கின்றது. அத்தோடு ஊடகங்களுக்கூடாக இஸ்லாமிய தஃவாவை முன்னெடுப்பதில் கூடிய கரிசனை செலுத்தி வருகிறேன்.
இந்த நாடு அறிவுக்கேந்திரமாக மாறும்போது நாமும் அறிவுமைய சமூகமாக மாறியிருக்க வேண்டும்
Created On: Friday, 11 April 2014 19:13

ஒரு சமூகத்தில் தான் வாழும் காலந்தான் பொற்காலமாக இருக்கவேண்டும், தனக்குப் பிறகு உருவாகும் காலம் பிற்போக்கான காலமாக இருந்தால்தான் தான் வாழ்ந்த காலம் பொற்காலமாக போற்றப்படும் என்று நினைப்பவர்கள் இருந்தால் அந்த சமூகமும் நாடும் உருப்படாது. எம்மை மிகைத்தவர்கள் உருவாக வேண்டும் என்ற உயர்நோக்கோடு சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சமூகத் தலைமைகள் சிந்திக்கின்ற போதுதான் அந்த சமூகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.
இந்நாட்டின் வர்த்தக சமூகம் என்று அறியப்பட்ட முஸ்லிம் சமூகத்தை அறிவுமைய வர்த்தகம் (Knowledge Based Business), விழுமிய மைய வர்த்தகம் (Value Based Business) என்ற இரண்டு அடிப்படைகளைக் கொண்டு தமது வியாபாரத்தை தொடர்கின்ற சமூகமாக மாற்றவேண்டும் என்று நாம் சிந்தித்தோம். அதற்கு பலருடன் சேர்ந்து திட்டங்களை தீட்டினோம்.
இன்ஸைட் நிறுவனத்தினால் இளம் தொழிலதிபர்களுக்காக நடத்தப்பட்ட 28 பயிற்சிநெறிகளில் நான் 24 பயிற்சிநெறிகளில் கலந்திருக்கின்றேன். அந்த 3 நாட்களைக் கொண்ட ஒரு பயிற்சிநெறியில் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் வருகின்ற எதிர்கால தலைவர்களோடும் எமது சமூகத்தின் மிகப் பெரிய வளமான இந்த இளைஞர் அணியோடும் முழுமையாகத் தங்கி அவர்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் இங்கிருக்கிறார்கள். சிலர் அவர்களோடு முழுமையாக இணைந்து இந்த மகத்தான பணிக்காக பங்களிப்புச் செய்தும் வருகிறார்கள். அந்தவகையில் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். பௌஸ், சகோதரர் ஹில்மி சுலைமான், சகோதரர் ஹனீஸ் போன்றவர்கள் நன்றிக்குரியவர்கள்.
Page 28 of 64
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>


