நோன்பு தொடர்பான சில சட்டங்கள்
Last Updated (Monday, 27 October 2008 19:04) Sunday, 14 September 2008 16:59
| Article Index |
|---|
| நோன்பு தொடர்பான சில சட்டங்கள் |
| Ulaha Asai |
| All Pages |
நோன்பு தொடர்பான சில சட்டங்கள்
''நோன்புடைய இரவுகளில் நீங்கள் உங்களுடைய மனைவிமாருடன் உடலுறவு கொள்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்திருந்தாலும், உங்களை அவன் மன்னித்து விட்டான். எனவே, நீங்கள் இனி உங்கள் மனைவிமார்களுடன் கூடுங்கள். மேலும் அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பவைகளைத் தேடிக்கொள்ளுங்கள். மேலும் இரவின் இருள் நீங்கி பகலின் ஒளி தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள். பருகுங்கள். எனினும், கிழக்கு வெழுத்த பின்பு இரவு வரை நோன்பை பூரணமாக்குங்கள். நிங்கள் பள்ளிவாயில்களில் இஃதிகாப் இருக்கும் போது (உங்கள் மனைவிமார்களுடன்) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய வரம்புகள். அதனால் அவற்றை நீங்கள் நெருங்க வேண்டாம். மனிதர்கள் தக்வாவடையவர்களாக மாறுவதற்காகத்தான் தன்னுடைய வசனங்களை அவர்களுக்க இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான். அன்றி, நீங்கள் உங்களுக்கிடைமயில் ஒருவர் மற்றவரின் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்களது சாட்சி பொய்யானது என) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் விழுங்கி விடும் நோக்கில் அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.'' (ஸூறா அல்பகறா:187-188)
இவை ஸூறா அல்பகராவின் 187ஆம், 188ஆம் வசனங்களாகும். முதல் வசனத்தில் அல்லாஹ் புனித நோன்புடன் தொடர்பான சில சட்டங்களை விளக்குகின்றான். நோன்பு கால இரவுகளில் மஃரிபுக்கும் பஜ்ருக்கும் இடைப்பட்ட நேரத்தில் உண்ணுதல், பருகுதல் உட்பட உடலுறவு கொள்ளுதல் போன்றன ஆகுமாக்கப்பட்டுள்ளமை பற்றியும் பள்ளிவாயலில் இஃதிகாப் இருக்கும் வேளையில் மனைவியுடன் கூடுவது தொடர்பான சட்டம் பற்றியும் இந்த வசனம் விளக்குகின்றன.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு நோம்பாளி நோன்பு திறந்ததன் பின்னால் நித்திரை கொண்டு, பின்னர் இரவில் பஜ்ருக்கு முன்பு எழுந்தாலும் உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றன ஹலாலானவையாக இருக்கவில்லை. நோன்பு திறந்து இஷா தொழுகை வரையுமே ஒருவருக்கு மேலே குறிப்பிட்டவற்றைச் செய்வது ஆகுமானதாக இருந்தது. இதனால் ஆரம்ப கால முஸ்லிம்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
ஒருமுறை ஓர் அன்ஸாரி நபித்தோழர் தனது தோட்டத்மதில் வேலை செய்து விட்டு நோன்பு திறக்கும் வேளை வந்த போது வீட்டுக்கு வந்தார். ஆனால், வீட்டில் உண்பதற்கு உணவு எதுவும் இல்லை. எனவே, உணவு தேடி வெளியே சென்றார். இடையில் தூக்க மிகுதியால் நித்திரை கொண்டு விட்டார். பின்னர் அந்த இரவிலேயே அவர் விழித்துக் கொண்டார். அவருக்கு உணவு உட்கொள்ள அனுமதி இருக்கவில்லை. அதனால் அவர் அடுத்த நாள் பகல் வேளையில் மயக்கமுற்று விழுந்தார். இவ்விடயம் நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறே இப்தாரில் தூங்கியெழுந்த ஒரு நபித்தோழர் தனது மனைவியுடன் கூட வேண்டும் என விரும்பினார். ஆனால் அது அக்காலத்தில் அனுமதிக்கப்படாமல் இருந்ததனால் அவர் சிரமத்திற்குள்ளானார். இந்நிலை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இந்த அல்குர்ஆன் வசனம் இறங்கியது.
''நோன்புடைய இரவுகளில் நீங்கள் உங்களுடைய மனைவிமாருடன் உடலுறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது.''
இது அனுமதிக்கப்பட்டதற்கான நியாயத்தை அல்லாஹ் அடுத்து விளக்குகின்றான்:
''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.''
அதாவது, கணவனும் மனைவியும் மிக நெருக்கமான தொடர்பையும் இருக்கமான பிணைப்பையும் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படாத போது அவர்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதனையே அல்லாஹ் இங்கு கூற விரும்புகின்றான்.
இங்கு, அல்லாஹ் கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்கின்றனர் என்று கூறுவதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்க வேண்டிய கிட்டிய உறவை விளக்குகின்றான். ஆடை மறைகக் கூடியது. பாதுகாக்கக் கூடியது. அவ்வாறே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையைப் போன்று திரையாகவும் பாதுகாவலாகவும் விளங்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூற விரும்புகின்றான்.
இஸ்லாம் தீனுல் பித்ரா இயற்கை மார்க்கமாகும். அது மனிதன் தனது இயல்புகளுக்கு முரணாக செயற்பட வேண்டும் என எச்சந்தர்ப்பத்திலும் எதிர்பார்ப்பதில்லை. அவனது இயற்கையான தேவைகளுக்கு மதிப்பளித்து இடம் கொடுக்க விரும்புகின்றது இஸ்லாம்.
பல நபித்தோழர்கள் குறித்த தடை இருந்த போது தங்களது ஆசைகளை அடக்கியும் அடக்க முடியாமலும் பெரும் சங்கட நிலையில் இருந்தார்கள். இதனைப்பற்றியே வசனத்தின் அடுத்தப்பகுதி இப்படிக் கூறுகின்றது:
''உங்களை நீங்களே ஏமாற்றிக் கொன்டிருந்ததை அல்லாஹ் அறிந்திருந்தாலும் உங்களை அவன் மன்னித்து விட்டான்.''
அதாவது, உங்களில் சிலர் சிரமத்துடன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியும் மேலும் சிலர் அடக்க முடியாது தவறிழைத்தும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை அல்லாஹ் அறிந்திருந்தான். ஆயினும், அவன் உங்கள் இயல்பை, பலவீனத்தை அறிந்து உங்களை மன்னித்ததுடன் உங்களுக்கு இருந்த விரக்தியை நீக்குவதற்காக தடையை நீக்கியும் தந்தான். வசனத்தின் அடுத்த பகுதி பின்வருமாறு கூறுகின்றது:
''எனவே, நீங்கள் இனி உங்கள் மனைவிமார்களுடன் கூடுங்கள்.''
ஆனால் இந்த அனுமதி வெறும் உடல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக மாத்திரம் வழங்கப்பட்டதல்ல. இவ்விடயத்தில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்பட வேண்டுமென தொடர்ந்து குறிப்படப்படுகின்றது.
''மேலும் அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பவைகளை தேடிக்கொள்ளுங்கள்.'' அதாவது இத்தொடர்பு மூலம் அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள உடல் இன்பம், பிள்ளைச் செல்வம் போன்ற பயன்களை கருத்திற் கொள்ளுங்கள் என்பதே இதன் கருத்தாகும்.
றமழானுடைய இரவுகளில் உடலுறவு கொள்வது அனுமதிக்கப் பட்டுள்ளது போலவே உண்ணுதல், பருகுதல் போன்றனவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை தொடர்ந்து இவ்வசனம் விளக்குகின்றது:
''மேலும் இரவின் இருள் நீங்கி பகலின் ஒளி தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள். பருகுங்கள். எனினும் கிழக்குவெழுத்த பின்பு இரவு வரை நோன்பை பூரணமாக்குங்கள்.''
இங்கு பஜ்ர் வரை சாப்பிடுவது அனுமதிக்கப்படுகின்றது. இது அல்லாஹ் வழங்கியுள்ள ஒரு சலுகை என்ற வகையில் இதனை எடுத்து நடப்பது வரவேற்கத்தக்கது எனக் கூறும் இமாம் இப்னு கஸீர் அவர்கள் இதனால்தான் நோன்பின் போது சஹர் செய்வது பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக கூறிப்பிட்டுள்ளார்கள் என்றும் கூறுகின்றார்.
'நீங்கள் ஸஹர் செய்வீர்களாக. சஹர் செய்வதில் பரகத் இருக்கின்றது' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (புகாரி,முஸ்லிம்)
'ஸஹரை முடியுமான வரை இரவின் பிற்பகுதியில் வைத்துக் கொள்வதே சிறந்தது' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முஸ்னத் அஹ்மதில் ஒரு நபி மொழி கீழ்வருமாறு பதிவாகியுள்ளது.
'எனது உம்மத் இப்தாரை அவசரப்படுத்தி ஸஹரை பிட்படுத்தி நடந்து கொள்ளும் காலமெல்லாம் நல்ல நிலையிலேயே இருக்கும்.'
தொடர்து பள்ளி வாயலில் இஃதிகாப் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவர் தனது மனைவியுடன் சேர்வது கூடாது என்பது விளக்கப்படுகின்றது:
''நீங்கள் பள்ளிவாயில்களில் இஃதிகாப் இருக்கும் போது (உங்கள் மனைவிமார்களுடன்) அவர்களுடன் கூடாதீர்கள்.''
நோன்புடன் தொடர்பான விடயங்களைப் பற்றி விளக்கும் இந்த வசனங்களில் இஃதிகாப் சமபந்தமாக குறிப்பிடுவதற்குக் காரணம், இஃதிகாப் என்பது ஒரு பொதுவான, எல்லாக் காலங்களிலும் செய்யக் கூடிய ஒரு அமலாக இருந்தாலும் நோன்பு காலத்தில் குறிப்பாக ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பது ஒரு சிறப்பான அமலாகும்.
இந்த அல்குர்ஆன் வசனத்தில் நோன்புடன் இணைந்து இஃதிகாபை குறிப்பிட்டிருப்பதன் மூலம் நோன்பு காலங்களில் சிறப்பாக இறுதிப்பத்தில் இஃதிகாபுடைய அமலைச் செய்வதற்கு தூண்டுதல் வழங்கப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் ரமழானுடைய இறுதிப்பத்தில் வழமையாக தனது வபாத் வரை இஃதிகாப் இருந்து வந்தார்கள்.
நாம் இது வரை விளக்கிய வசனங்களின் இறுதிப்பகுதி கீழ்வருமாறு அமைகின்றது:
''இவை அல்லாஹ்வுடைய வரம்புகள். அதனால் அவற்றை நீங்கள் நெருங்க வேண்டாம்''
அதாவது, இதுவரை விளக்கிய நோன்புடன் இஃதிகாபுடனும் தொடர்பான சட்டங்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளாகும். அவற்றை நெருங்கவும் கூடாது என்பதாகும். அவற்றை மீறுவது ஒரு புறம் இருக்க அவற்றை அண்மிக்கவும் வேண்டாம் என அல்லாஹ் கூறுகின்றான். இந்தவகையில் எப்போதும் அல்லாஹ்வின் வரம்புகளுக்கும் எங்களுக்குமிடையே ஒரு பாதுகாப்பு இடைவெளி இருத்தல் வேண்டும். ஏனெனில் வேலியை நெருங்கி நின்றால் சில வேளை பலவீனமான சந்தர்ப்பங்களில் வரம்பை மீறிவிட இடமேற்படலாம். எனவே, ஹராமான விடயங்களை விட்டும் முடியுமானவரை தூர நிற்பது எல்hலவகையிலும் பாதுகாப்பானதாகும்.
மனிதர்கள் தக்வாவுடையவர்களாக மாறுவதற்காகத்தான் தன்னுடைய வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகினன்றான் என்று தொடாந்து கூறுகின்றது அல்குர்ஆன்.
இனி அடுத்த வசனத்தைக் கவனிப்போம்:
முன்னைய வசனம் உண்ணுதல், பருகுதல் போன்றவற்றை தவர்த்துக் கொள்வது பற்றி பேசியது. அடுத்த வசனத்திலும் தவிர்ந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு உணவு பற்றி விளக்கப்படுகின்றது. அதுதான் பிறரின் சொத்துக்களை உண்பதாகும். அதிகாரிகளிடம் பொய்யான ஆதாரங்களைக் காட்டி, நாவன்மையை வைத்து பிறர் உடமைகளை அபகரித்து விழுங்குவது கண்டிப்பாக தவர்க்கப்பட வேண்டியவொன்று என்பதையே இந்த வசனம் கூறுகின்றது:
''அன்றி, நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்களது சாட்சி பொய்யானது என) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் விழுங்கி விடும் நோக்கில் அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.''
ஒருவர் பிறருக்குச் சொந்தமான சொத்தை அது தனக்குரியதல்ல என்பதனை அறிந்திருந்தும் அதனை அபகரித்துக்கொள்ளும் நோக்குடன் நீதிமன்றத்தில் வழக்காடச் செல்லும் மனிதனைப் பற்றியே இந்த வசனம் பேசுகின்றது என இமாம் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒருவர் தன் பக்கத்தில் அநீதி இருக்கின்றது என்பதனை அறிந்த நிலையில் வழக்காடக்கூடாது என பல தாபிஈன்கள் குறிப்பிட்டுள்ளதை இமாம் இப்னு கஸீர் தனது தப்ஸீரில் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்வருமாறு கூறினார்கள்:
'நான் ஒரு சாதாரண மனிதனே. என்னிடம் ஒரு வழக்கு வந்து அவர்களில் ஒருவர் மற்றவரைவிட நாவன்மையும் வாதாட்டத் திறமையுமுடையவராக இருந்து, நான் அவருக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கி விட முடியும். ஆனால், நான் ஒரு முஸ்லிமின் உரிமையை வழங்கி தீர்ப்புக் கொடுத்திருப்பின் அது ஒரு நெருப்புத் துண்டாகும். அவர் விரும்பின் அதனை சுமந்து செல்லட்டும். அல்லது விட்டு விட்டுச் செல்லட்டும்.'
நீதிபதி வெளிப்படையான வாதப் - பிரதிவாதந்களையும் முன்வைக்கப்படும் சாட்சியங்களையும் வைத்தே தீர்ப்பு வழங்குவார். நீதிபதியை பிழையாக வழிநாடாத்தி தனக்குச் சார்பாக தீர்வைப் பெற்றுக் கொள்பவர் மாபெரும் குற்றத்தைச் செய்பவர் என்பதையே இவ்வசனம் சொல்கின்றது.
முச்சுத்திணற அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக! செல்லும் வேகத்தில் குளம்பை அடித்து தீப்பொறி பறக்கச் செய்யும் அந்தக் குதிரைகள் மீது சத்தியமாக! அதிகாலை வேளையில் திடீரென தாக்கும் அந்தக் குதிரைகள் மீது சத்தியமாக! அவ்வாறு ஓடுவதன் காரணமாக புழுதியைக் கிளப்பி விடும் அக்குதிரைகள் மீது சத்தியமாக! எதிரிக் கூட்டத்தின் மத்தியில் சென்று போராடும் அக்குதிரைகள் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். அவனே அதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான். மேலும் அவன் செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கின்றான். கப்ருகளில் உள்ளவை வெளியே எறியப்பட்டு சிதறடிக்கப்பட்டும் போது நிகழ்பவற்றை அவன் அறிந்து கொள்ளவில்லையா? மேலும் உள்ளங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது நிகழ்பவற்றை அவன் அறிந்து கொள்ளவில்லையா? நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கு அறிந்தவனாகவே இருப்பான் (ஸூறா அல்ஆதியாhத்: 1-11)
பதினொரு வசனங்களைக் கொண்ட அல்ஆதியாத் மக்காவில் இறக்கியருளப்பட்ட ஒரு ஸூறாவாகும்.
இவ்வத்தியாயம் ஆரம்பமாக எதிரிகளைத் தாக்கும் குதிரைகளைப் பற்றிப் பேசுகின்றது. அக்குதிரைகள் மிக வேகமாக ஓடுகின்றன. மூச்சுத் திணற ஓடுகின்றன. அவற்றின் குளம்புகள் கற்களில் பட்டு தீப்பொறி பறக்கும் அளவுக்கு அதி வேகமாக ஓடுகின்றன. புழுதி கிளப்பி அப்பிரதேசமே மறையும் அளவுக்கு அவற்றின் ஓட்டம் அமைந்திருக்கின்றது என்று கூறி அக்குதிரைப் படையை வர்ணித்து, அக்குதிரைகளின் மீது சத்தியமும் செய்யப்படுகின்றது. இவ்வாறு அக்குதிரைகள் மீது சத்தியம் செய்வதன் மூலமாக அவற்றின் சிறப்பும் மாண்பும் எடத்துக் காட்டப்படுகின்றன.
குதிரைகள் மீது சத்தியம் செய்து வலியுறுத்த வந்த உண்மைகள் தொடர்ந்து கூறப்படுகின்றன.
மனிதன், இறைவன் தனக்குச் செய்த அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்ட விதத்தில் நடந்து கொள்கின்றான். அவனது நன்றி கெட்டப் போக்குக்கு அவனது பேச்சு, செயல்கள், நடத்தைகள் சான்றாக இருக்கின்றன. இவைதான் அந்த உண்மைகள். உலக செல்வத்தை அதிகம் நேசிக்கும் மனிதனது சுபாவம் பற்றியும் இந்த ஸூறா பேசுகின்றது. இறுதியாக மறுமையின் பயங்கரத்தை, செல்வமோ செல்வாக்கோ பயன்படாத அந்த நாளின் நிலையை நினைவூட்டி ஸூறா நிறைவுபெறுகின்றது.
இவ்வத்தியாயத்தின் வசனங்களை சற்று விளக்கமாக கீழே நோக்குவோம்:
மூச்சுத்திணற அதிவேகமாக ஓடம் குதிரைகள் மீது சத்தியமாக!
இவ்வசனத்தில் அல்லாஹ் எதிரிகளைத் தாக்குவதற்காகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியம் செய்கின்றான். அவற்றை மிக வேகமாக ஓடுபவை என்றும் மூச்சுத்திணற கனைத்துக் கொண்டு ஓடுபவை என்றும் வர்ணிக்கின்றான்.
தீப்பொறி பறக்கச் செய்யும் அந்தக் குதிரைகள் மீது சத்தியமாக!
இவ்வசனமுமு; அக்குதிரைகளின் கடகதி வேகத்தையே விளக்குகின்றது. அவற்றின் குளம்புகள் பாறைகளில் பட்டு பொறி பறக்கின்றது. அந்த அளவு வேகமாக அவை ஓடுகின்றன. அவை எங்கு செல்கின்ற என்பது அடுத்த வசனத்தில் விளக்கப்படுகின்றது:
அதிகாலை வேளையில் திடீரெனத் தாக்கும் அக்குதிரைகள் மீது சத்தியமாக!
ஆம். இந்தக் குதிரைகள் இவ்வளவு வேகமாகச் செல்வது ஒரு தாக்குதலை நடாத்துவதற்காகவே. அதுவம் எதிரிகள் விழித்துக் கொள்ளாத நேரம் பார்த்து, அதிகாலைப் பொழுதில் ஒரு திடீர்த் தாக்குதலை தொடுக்கச் செல்கின்றன.
புழுதியைக் கிளப்பி விடும் அக்குதிரைகள் மீது சத்தியமாக!
இக்குதிரைகள் மிக வேகமாக ஓடுவதனால் புழுதி கிறம்புகின்றது. எங்கும் தூசுப் படலம். எதிரிகள் இப்படையை சரியாக கண்டு கொள்ள முடியாத அளவுக்கு எங்கும் புழுதி மயம்.
கூட்டத்தின் நடுவே சென்று தாக்கும் குதிரைகள் மீது சத்தியமாக!
அக்குதிரைகள் புழுதி கிளப்ப, எதிரிக் கூட்டத்தின் நடுவே சென்று அதைக் கடுமையாக தாக்குகின்றன. எதிரிகளை அவர்கள் மத்தியில் சென்றே தாக்குவதனால் அவர்கள் நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டு விடுவர். சிதறி ஓடுவர் என்பதனால் அப்படிச் செய்கின்றன.
ஒரு யுத்தத்தின் விறுவிறுப்பான கட்டங்களை துள்ளும் நடையில் துல்லியமாக சித்தறித்துக் காட்டுகின்ற அல்குர்ஆன் வசனங்கள் இவை. அல்லாஹ் இவ்வசனங்களுக்கூடாக குதிரைகள் மீது சத்தியம் செய்வதானது அவற்றின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.
உண்மையில் இஸ்லாமிய நோக்கில் குதிரைக்கு தனிச் சிறப்பு உண்டு. புனிதப் போருக்கான ஒரு முக்கிய சாதனம் என்ற வகையில் அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. உலகம் முடியும் வரை குதிரையின் மதிப்பும் பெறுமதியும் குன்றப் போவதில்லை என ஹதீஸ்களும் விளக்குகின்றன.
குதிரைகளின் முன்னெற்றி உரோமங்களில் உலகம் அழியும் வரை அருளும் பாக்கியமும் பிணைக்கப்பட்டிருக்கின்றது என்பது நபி மொழி (ஆதாரம் : புஹாரி)
இக்குதிரைகள் மீது சத்தியம் செய்து அல்லாஹுத்தஆலா வலியுறுத்த விரும்புகின்ற உண்மைகளை தொடர்ந்து வரும் வசனங்கள் விளக்குகின்றன.
நிச்சயமாக மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.
இதுதான் அந்த உண்மை. மனிதன் தனது இறைவனது அருட்கொடைகளுக்கு நன்ற சொல்லாதவனாக இருக்கின்றான். எப்போதும் தனக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பெரிதாக அலட்டிக் கொள்ளும் அவன், தனக்கு அல்லாஹ் அருளியுள்ள அருட்பெறுகளை மறந்து விடுகின்றான். அவனது இந்த நன்றி மறந்த போக்குக்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அவனது சொல், செயல், நடத்தை இதனைக் காட்டுகின்றது. இவ்வுண்மையை ஸூறாவின் அடுத்து வரும் வசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
அவன் அதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்
இங்கு அவன் என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் என்றும் இந்தவகையில் மனிதனது நன்றி மறந்த போக்கிற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கின்றான் என்றும் இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுப்போரும் உள்ளர். மறுமையில் மனிதன், தான் உலகில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்து வாழ்ந்ததனை ஏற்று தனக்கெதிராகவே சாட்சி சொல்வான் என்ற கரத்தையே இவ்வசனம் சொல்கின்றது என்று மற்றும் சில அறிஞர்கள் விளக்குகின்றனர்.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதிலும் அவனை வணங்கி வழிபடுவதிலும் பொடுபோக்காக நடந்து கொள்ளும் மனிதன் உலக செல்வங்களைப் பொறுத்தவரையில் மட்டும் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றான் என்பதை தொடர்ந்து வரும் வசனம் விளக்குகின்றது:
மேலும் அவன் செல்வத்தை விரும்புவதில் மிகவும் கடுமையாக இருக்கின்றான்.
ஈமான் இல்லாத மனிதனது இயல்பு இப்படித்தான் இருக்கும். உலக வாழ்வும் அதன் இலாபமுமே அவனது இலக்கு. ஈமான் ஓர் உள்ளத்தில் நுழைந்து விடும் போது அது அவனையும் அவனது கண்ணோட்டங்கள், பெறுமானங்கள், அளவு கோல்கள் முதலான அனைத்தையும் மாற்றிவிடும். அவனது நிராகரிப்பை, நன்றி மறந்த போக்கை மாற்றி, அல்லாஹ்வின் அருட்கொடைகளை ஏற்று அவற்றுக்கு நன்றி செலுத்தும் நிலைக்கு அவனை ஆக்கி விடும். மேலும் ஈமான் ஆனத அதனைப் பெற்ற மனிதனில் இருந்த சுயநலத்தையும் உலோபித்தனத்தையும் பரோபகாரமாகவும் பரந்த மனப்பான்மையாகவும் மாற்றி விடும். மனிதன் தான் போட்டியிட்டு சிரமப்பட்டு பெற்றுக் கொள்ள வேண்டிய பெறுமானங்கள் எவை என்பதையும் ஈமான் அவனுக்கு உணர்த்தும்.
உண்மையில் ஈமான் இல்லாத மனிதன் அற்பமானவன். சிறியவன். இக்குறுகிய பூவுலகுடன் கட்டுண்டவன். தனது குறுகிய ஆயுளுடன் மட்டுப்படுத்தப்பட்டவன். ஈமான் ஒன்று மாத்திமே இந்த பூமியை விட விசாலமான பரந்து விரிந்த ஒரு பேருலகுடன் மனிதனை தொடர்புபடுத்தவல்லது. உலகையும் மறுமையையும் இணைக்கக் கூடிய முடிவில்லாத உலகத்துடன் தொடர்புபடுத்தக் கூடியதுமாகும்.
ஸூறாவின் இறுதிப் பகுதி உலக மோகத்தில் மூழ்கி இருக்கும் மனிதனுக்கு உலக ஆசையை மறக்கச் செய்யும் ஒரு மறுமையின் காட்சியை எடுத்துக்கான்பிக்கின்றது. இதன் மூலம் நன்றி மறந்து உலக சுகபோகங்களில் இன்பங் கண்டு வாழும் மனிதனுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படுகின்றது.
கப்ருகளில் உள்ளவை வெளியேற்றப்பட்டு சிதரிக்கப்படும் போது நிகழ்பவற்றை அவன் அறியமாட்டானா?
உலக முடிவைத் தொடர்ந்து புதைகுழிகளில் உள்ள அனைவரும் விசானைக்காக எழுப்பப்படுகின்ற உண்மையை, நன்றி மறந்து உலக இன்பத்தில் மூழ்கி வாழும் மனிதன் அறியவில்லையா என்று இவ்வசனம் வினா எழுப்புகின்றது.
உலக அழிவைத் தொடர்ந்து நடக்க இருக்கின்ற பயங்கரங்களைப் பற்றியும் மேற்கண்ட நிலையில் உலகில் வாழ்ந்தோரின் அன்றைய அவல நிலையைப் பற்றியும் அல்குர்ஆன் பல இடங்களில் பரவலாக விளக்கியுள்ளது. ஸூறா யாஸீன் ஒரு வசனம் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்:
ஸூர் ஊதப்பட்டால் அவர்கள் உடனடியாக தமது புதைகுழிகளில் இருந்து வெளிப்பட்டு தாங்கள் இறைவனிடம் வேகமாக ஓடி வருவார்கள். மேலும், எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களை எங்கள் உறங்குமிடங்களில் இருந்து எழுப்பியவர் யார்? என்று வினவுவார்கள். அதற்கு அவர்களை நோக்கி, இது ரஹ்மானான அல்லாஹ் உங்களக்கு வாக்களித்ததும் இறைத்தூதர்கள் உங்களுக்கு உண்மை என்று எடுத்துக் கூறியதுமாகும் எனக் கூறப்படும்.
மேலும், உள்ளத்தில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது நிகழ்பவற்றை அவன் அறிய மாட்டானா?
இவ்வசனம் மரணித்தவர்கள் மறுமையில் எழுப்பப்படுவதனைத் தொடர்ந்து அவர்களின் அனைத்து இரகசியங்களும் மர்மங்களும் பகிரங்கப்படுத்தப்படும் பயங்கரத்தைச் சொல்கிறது. ஏனெனில், அல்லாஹ் அந்நாளில் யாவரையும் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருப்பான். ஸூறாவின் இறுதி வசனம் இவ்வுண்மையை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
நிச்சயமாக அவர்களின் இறைவன் அந்நாளிலே அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருப்பான்.
அந்நாளில் விசாணைக்காக அனைவரும் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு அழைத்து வரப்படுவர். அங்கே அவன் அவர்களின் அனைத்து இரகசியங்களையும் அறிவிப்பான். அங்கு எதுவும் எவருக்கும் மறைவானதாக இருக்காது. நல்லவர்கள் தமக்குரிய நற்கூலியையும் நன்றி மறந்து வாழ்ந்தவர்கள் தமக்குரிய தண்டனையையும் நிச்சயம் பெறுவர்.
மனிதன் மேற்கண்ட உண்மைகளை நன்கு உணர்ந்து இவ்வுலகிலேயே தனது வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற போதனையை இந்த ஸூறா பொதுவாக முன்வைக்கின்றது. சடவாத சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டு உலக சம்பத்துக்களை அடைவதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழும் மனிதனில் உணர்வுகளை தட்டியெழுப்புவதாகவும் அவனையே உலுக்கி உசுப்புவதாகவும் இந்த ஸூறா அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
