அழிவு தரும் தெளிவு
Last Updated (Sunday, 16 January 2011 18:04) Sunday, 16 January 2011 17:28

அல்ஹதீஸ் விளக்கம்
அழிவு தரும் தெளிவு
அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“மனிதனுக்கு முன்னால் தொண்ணூற்றொன்பது மரணங்கள் காத்திருக்கின்றன. இவை எல்லாவற்றிலிருந்தும் அவன் தப்பினாலும் கடைசியில் முதுமை என்ற ஆபத்தில் விழுந்து அவன் மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும்.”
மனிதன் எப்போதும் அபாய நேர்வுக்குட்பட்டவன். ஆபத்துக்களை எதிர்நோக்கியிருப்பவன் யுத்தங்கள், கலவரங்கள் என்பவற்றை அவன் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இடி, மின்னல், தீ, வெள்ளம், புவி நடுக்கம், எரிமலை, மண்சரிவு, கடல் கொந்தளிப்பு முதலான இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் நிலையும் அவனுக்கு உருவாவதுண்டு.
மிருகங்கள், விஷஜந்துக்களினாலும் மனிதனுக்கு ஆபத்துக்கள் விளைவதுண்டு. பகைமை கொண்டவர்களின் சதிகள், சூழ்ச்சிகள் முதலானவையும் அவனைச் சூழ்ந்துள்ளன. இவற்றுக்கு அப்பால் எண்ணிலடங்கா நோய்கள் மனிதனைக் குறிவைத்துள்ளன. எல்லா ஆபத்துக்களிலிருந்தும் தப்பிப் பிழைக்கும் ஒரு மனிதன் இறுதியில் முதுமை என்ற ஆபத்தை எதிர்கொண்டு மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.
இவ்வாறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வுலகில் மனிதன் எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது? இக்கேள்விக்கு விடை காண விரும்பாத எவரும் இருக்க முடியாது.
ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பம், சொத்து செல்வம் உட்பட தனது அனைத்து உடமைகளையும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முழு முயற்சி செய்கின்றான். உலகமெங்கும் பாதுகாப்பு, பந்தோபஸ்த்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கடற்படை, தரைப்படை, விமானப்படை, பொலிஸ்படை, தீயணைப்புப் படை, மெய்ப் பாதுகாவலர்கள், முதலுதவி அணிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவமனைகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், முன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகள், இயந்திரங்கள் என்று எங்கும் மனிதர்களை அபாயங்களிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் காப்பதற்க்கான ஏற்பாடுகள்தான் எத்தனை? எத்தனை?!
மனிதன் செல்லும் இடமெல்லாம் அதிகம் காண்பது ‘ஆபத்து’ ‘அபாயம்’ ‘கவனம்’, ‘‘எச்சரிக்கை’, ‘ஜாக்கிரதை’ ‘நெருங்காதீர்’ ‘நுழைவது தடை’ ‘உட்பிரவேசிக்க வேண்டாம்’ ‘இங்கு நடமாட வேண்டாம்’ முதலான வாசகங்களைத் தாங்கிய பலகைளையும் பதாதைகளையும்தான்.
ஆயினும், எல்லா தற்காப்பு, முன் எச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைளையும் மீறி நாளாந்தம் மனித உலகில் வேறுபட்ட பெயர்களில் அழிவுகளும் அனர்த்தங்களும் நடந்த வண்ணமே உள்ளன. வெள்ள அனர்த்தம் என்பார்கள், மண்சரிவு என்பார்கள், தீவிபத்து என்பார்கள், தொற்று நோய் என்பார்கள். இவ்றை எல்லாம் ஒரே வார்த்தையில் சொல்வதாயின் ‘அழிவு’ எனலாம்.
உண்மையில் இத்தகைய அழிவுகள் ஆபத்துக்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கக்கூடிய நம்பகமான காவற்படை இருக்கின்றது. அது புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு படை, இரவு பகலாக மனிதனைப் பாதுகாக்க வல்ல மிகவும் சக்திவாய்ந்த ஒரு படை, அதுதான் உலகைப் படைத்து, இரட்சித்துக் காப்பாற்றுகின்ற இறைவனின் படையான வானவர்களின் (மலக்குகளின்) படையாகும். இப்படையைப் பற்றியே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
“அவனே தன் அடியார்களுக்கு மேல் இருந்து அடக்கி ஆள்கின்றவன். உங்களுக்கு காவலர்க(ளான மலக்குக)ளையும் அவன் அனுப்புகிறான்.”
(6: 61)
“நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.” (82: 10)
ஸூரா அர்ரஃதின் பின்வரும் வசனத்தைக் கவனியுங்கள்:
“(மனிதர்களில் ஒவ்வொருவருக்கும்) அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகல்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கின்றனர்.” (13: 11)
இவ்வசனத்திற்கு இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) தரும் விளக்கம் கவனத்துக்குரியதாகும்.
'ஓர் அடியானை நோக்கி மாறி மாறி வரும் மலக்குகள் இருக்கின்றனர். அவரைக் காவல் புரிய இரவில் ஒரு கூட்டம் வரும். பகலில் மற்றொரு கூட்டம் வரும். அவர்கள் அவ்வடியானை எல்ல வகையான கெடுதிகள், ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்பர். அடியானின் நல்ல, கெட்ட செயல்களைப் பதிவு செய்வதற்காகவும் சில மலக்குகள் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றனர். ஒருவர் வலப்பக்கம் நிற்பார் மற்றவர் இடப்பக்கம் நிற்பார். வலப்பக்கத்தில் உள்ளவர் நன்மைகளைப் பதிவு செய்வார். இடப்பக்கத்தில் உள்ளவர் தீமைகளைப் பதிவு செய்வார். மேலும் இரு மலக்குகள் அவரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பர். அவர்களில் ஒருவர் முன்னால் இருப்பார் மற்றவர் பின்னால் இருப்பார் இவ்வாறு பகலில் நால்வரும் இரவில் நால்வரும் எப்போதும் அடியானோடு இருப்பர். இரண்டு பதிவாளர்கள் இரண்டு பாதுகாவலர்கள்.”
'அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு அவரைப் பாதுகாக்கின்றனர்' என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தரும் விளக்கம் வருமாறு:
'மலக்குகள் முன்னாலும் பின்னாலும் நின்று அவனைக் காக்கின்றனர். அல்லாஹ்வின் நிர்ணயம் (கத்ர்) வந்துவிடும் சந்தர்ப்பத்தில் மட்டும் தூர விலகிச் சென்றுவிடுகின்றனர்.'
முஜாஹித் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்:
'எந்த ஓர் அடியானுக்கும் அவனைக் காக்கும் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டே இருப்பார். அவர் அவ்வடியானை தூக்கத்திலும் விழிப்பிலும் மனிதர்கள், ஜின்கள், விஷஜந்துக்களின் தீங்குகள் அணுகா வண்ணம் பாதுகாப்பார். அம்மனிதனை நாடி எது வந்தாலும் அந்த மலக்கு ‘இதே உமக்குப் பின்னால் இந்த ஆபத்து வருகிறது’ எனக் கூறாமல் இருக்க மாட்டார். ஆயினும் அல்லாஹ்வின் கட்டளைப்படி வருவது மட்டும் அவனைத் தாக்காமல் இருக்காது.'
ஒரு முறை ஒரு மனிதர் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து 'எச்சரிக்கையாக இருங்கள் சிலர் உங்களைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்' என்றார். அதற்கு அன்னார் 'ஒவ்வொரு மனிதனுடனும் இரு மலக்குகள் இருக்கின்றனர். அல்லாஹ்வின் ஏற்பாடு சம்பந்தப்படாத விடயங்களில் அம்மனிதனைப் பாதுகாப்பதே அவர்களின் பணியாகும். அல்லாஹ்வின் நிர்ணயம் வந்துவிட்டால் அவர்கள் இருவரும் வழிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். (அஜல்) மனிதனது வாழ்வு பலம் வாய்ந்ததொரு கேடயமாகும்' என்றார்கள்.
இந்த மலக்குகளின் பாதுகாப்பைப் பெறுவது எப்படி? அதற்கான வழி என்ன? என்ற கேள்விகள் இப்போது பிறக்கின்றது.
மலக்குகள் தூய்மையானவர்கள் அவர்கள் தூய்மையானவர்களுடன்தான் உறவு கொள்வார்கள். மலக்குகள் பாவம் செய்யாதவர்கள் அவர்கள் பாவங்களில் ஈடுபடாதவர்களையே நேசிப்பர். மலக்குகள் இறை கட்டளையை அணுவும் பிசகாமல் நிறைவேற்றுபவர்கள் அவர்கள் இறைகட்டளையை ஏற்று, விலக்கல்களைத் தவிர்ந்து நடப்போரையே அணுகுவர். தீமைகள், குற்றச் செயல்கள் அநீதிகள் முதலான பாவச் செயல்கள் நடைபெறும் ஷைத்தானியச் சூழலில் அருளை வழங்கும் அருள்மயமான மலக்குகள் இருக்க மாட்டார்கள். எனவே, இத்தகைய சூழலில் இருப்போருக்கு மலக்குகளின் பாதுகாப்பு கிட்ட வாய்ப்பிருக்காது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்தத்தைத் தொடர்ந்து நாட்டின் புறச் சூழல் சுத்தம் செய்யப்படுகிறது. நாட்டின் உட்கட்டமைப்பு மீண்டும் கட்டியெழுப்பும் பணி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டின் உடலைக் கட்டியெழுப்புவது போலவே நாட்டின் உத்தமமான மனிதர்களும் புனர்நிர்மாணத்திற்குற்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் ஆன்மிக ரீதியில் வளப்படுத்தப்பட வேண்டும். படைத்த இறைவனை நோக்கி மக்கள் மீள வேண்டும். இறைவனது சாபத்துக்கும் கோபத்துக்கும் காரணமாக அமைகின்ற மது, போதைவஸ்து, விபசாரம், ஆபாசத்தைத் தூண்டும் ஆபாசப் படங்கள், ஆபாசப் பாடல்கள், சங்கீதம், விளம்பரங்கள், களியாட்டங்கள், கேளிக்கைள், ஆடைகள், ஆபரணங்கள் முதலானவற்றை ஒழித்து நாட்டை பாதுக்காக்க வேண்டும். இறைவனது அருள் இறங்கத் தடையாக அமையும் பகைமை, குரோதம், துவேஷ மனப்பான்மை முதலான துர்க்குணங்களும் கொலை, கொள்ளை, மோசடி ஏமாற்று மதலான குற்றச் செயல்களும் நாட்டு மக்கள் மத்தியில் இருந்து நீங்க வழி செய்தல் வேண்டும். இவ்வாறு வானவர்களின் வருகைக்கான சூழல் உருவாக்கப்படல் வேண்டும். வீட்டையும் நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப இதுவே மிகச் சரியான வழிமுறையாக அமைய முடியும்.
பத்ர் யுத்தம் முதலான பல்வேற சந்தர்ப்பங்களில் மலக்குகள், இறைவிசுவாசிகளுக்கு உதவ பூவுலகுக்கு இறங்கினர். மக்காவையும் மதீனாவையும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கவும் விஷேடமான மலக்குகள் நியமிக்கப்பட்டனர். நாமும் மேற்குறிப்பிட்ட சூழலை தனிப்பட்ட வாழ்விலும் உருவாக்குவதன் மூலம் மலக்குகளின் உதவியைப் பெறலாம்.
மலக்குகளின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளும் வழிகளையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். உதாரணமாக 'ஒருவர் படுக்கைக்குச் செல்ல முன்னர் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் வேருக்குப் பின்புறத்திலிருந்து வரும் ஒரு மலக்கு அவரை அடுத்த நாள் காலைவரை காவல் புரிவார். எத்தகைய ஷைத்தானும் அவரை அணுக மாட்டா.' (அல்புகாரி)
'ஒருவர் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நான்காம் கலிமாவை பத்துத் தடவைகள் ஓதினால் அடுத்த நாள் காலைவரை அவரை ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கும் ஒரு காவற்படை (அல்லாஹ்வின் பக்கமிருந்து) அனுப்பி வைக்கப்படும்.'
காலை, மாலை உட்பட விஷேட சந்தர்ப்பங்களில் ஓதக்கூடிய அவ்ராதுகளும் துஆக்களும் அல்லாஹ்வின் உதவி மலக்குகள் மூலம் கிட்ட துணைபுரிபவையாகும். உதாரணமாக நபியவர்கள் ஓதிய பின்வரும் துஆவைக் கவனியுங்கள்:
'யா அல்லாஹ்! நான் இடிபாட்டில் (அகப்பட்டு மரணிப்பதில்) இருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (மலை முதலானவற்றிலிருந்து) விழுவதில் (வீழ்ந்து மரணிப்பதில்) இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் கவலை, நீரில் மூழ்குதல், தீயில் எரிதல், முதுமை ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண வேளையில் ஷைத்தான் என்னைப் பிடிப்பதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உனது பாதையில் நான் புறமுதுகு காட்டிய நிலையில் மரணிப்பதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (விஷஜந்துக்களால் தீண்டப்பட்டு நான் மரணத்தைத் தழுவுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.'
அனர்த்தங்கள், ஆபத்துக்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றவல்ல ஒரு தெய்வீகப் படை இருப்பது போல ஒரு தெய்வீக ஆயுதமும் உண்டு. அதுவே பிரார்த்தனையாகும்.
'பிரார்த்தனை என்பது இறைவிசுவாசியின் ஆயுதமாகும்' என்ற நபிமொழி இவ்வுண்மையைச் சொல்லி நிற்கின்றது.
